பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாகவும் பிறருக்கு நன்மை தருவதாகவும் இருக்கவேண்டும். ஒரு பொருளும் இல்லாமல், பயனில்லாத வீண் பேச்சுகளைப் பேசுவதைக் காட்டிலும், மனதுக்கு அமைதி தரும் அர்த்தமுள்ள ஒரு வார்த்தை பேசுவதே மேலானது. வீண்பேச்சினால் அதைப் பேசுபவருக்கும் அதைக் கேட்பவர்களுக்கும் நேரம் வீணாகுமே தவிர வேறு எந்த நன்மையும் உண்டாவதில்லை.
நாம் ஏதேனும் ஒரு சமயத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகிற போது, உடனே நீதி கேட்டு நிற்கக் கூடாது. நாம் நம்முடைய நியாயத்தை உடனடியாக நிறுவ முனைகிறபோது, எதிராளியின் சீற்றமும் விரோதமும் அதிகரிக்கும்.
⭐ உரையாடும் போது எதிரே உள்ளவர் மட்டும் கேட்கும்படி பேசுதல் வேண்டும்.
⭐பலருடைய காதில் விழுமாறு பேசுவதை தவிர்க்க வேண்டும் மற்றும் பேசும்பொழுது கண்களை உருட்டியும் அடிக்கடி இமைத்தலும் கைகளையும் தலைகளையும் மிகையாக அசைத்தலை தவிர்த்தல் வேண்டும்.
⭐பேசும்போது சொற்களை முழுமையாக உச்சரித்தல் வேண்டும், சொல்லின் கடைசி எழுத்து வரை தெளிவாக உச்சரித்தல் வேண்டும்.
⭐ஒருவர் கேட்கும் வினாவுக்கு பதில் கூற வேண்டுமானால் அவர் கூறும் முழுக் கருத்தையும் தெளிவாக புரிந்து பின்னரே பதில் அளித்தல் நன்று.
⭐தேவையற்ற மற்றும் பயனில்லாத உரையாடலை தவிர்த்தல் வேண்டும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது பேச்சு திறமையின் அடித்தளம் ஆகும்.
⭐ உங்களிடம் பேசுபவரின் கண்களை பார்த்து பேசும் பொழுது அவர்களுக்கு உங்கள் மீதான ஒரு நம்பிக்கை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களின் கண்களை பார்க்கும் பொழுது நீங்கள் அவர்களின் பேச்சுக்குத் தரும் முக்கியத்துவத்தை அவர்களால் உணர முடியும்.
⭐ மற்றவர்களிடம் பேசும் பொழுது உங்கள் பெருமை மற்றும் சாதனைகளை மூன்று வரிகளில் முடித்து விடுவது சாலச் சிறந்தது. ஏனென்றால், உங்கள் பெருமைகளை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அது மற்றவர்களுக்கு உங்களை "தற்பெருமை" கொண்டவர் என்னும் எண்ணத்தை உண்டாக்கி விடும்.