தங்கம் பணம் வீக்கத்தை சமாளிக்க உதவும் ஆனால் செல்வம் சேர்க்காது....
பலர் நீண்ட காலமாக தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு வருகிறார்கள்.
தங்கம், பணவீக்கத்தை சமாளிக்க உதவும். ஆனால் செல்வம் சேர்க்காது. "Gold is an inflation hedge, Not a wealth builder" என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.
அந்த வகையில் செல்வம் சேர்க்க விரும்புவர்கள் நீண்ட காலத்தில் ஈக்விட்டி(Equity) சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில்(Mutual Funds) முதலில் செய்து வரலாம். ஈக்விட்டி டைவர்சிட்டி ஃபண்டுகள் 10, 15, 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் மேல் வருமானம் தந்திருக்கின்றன.
ஒருவர் மாதம் பத்தாயிரம் வீதம், பத்தாண்டுக்கு ஈகிவிட்டி டைவர்சிட்டி பண்டுகளில் முதலீடு செய்து வருகிறார். ஆண்டிற்கு 15 சதவீதம் வருமானம் கொடுத்தால், அவர் மொத்தம் செய்த முதலீடு 12 லட்சம் என்பது சுமார் 28 லட்சமாய் பெருகி இருக்கும்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் தங்க ஆசையை நிறைவேற்றும் திட்டமாக தங்க நகைச்சீட்டு இருக்கிறது. தங்க நகை சில்லரை விற்பனையாளர்கள் நடத்தும் திட்டமான, இதில் மாதம் ஆயிரம் ரூபாய் கூட சேமிக்க முடியும். சில கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற திட்டம்.
குறைந்தபட்சம் 12 மாதங்கள் தொடங்கி சில ஆண்டுகள் வரை செல்கிறது இந்த தங்க நகை சேமிப்பு திட்டம். பொதுவாக போனஸ் தொகையாக கூடுதலாக ஒரு மாத தவணை தருகிறார்கள். திட்டத்தில் சேரும்போது தங்க நாணயம், வாட்ச், பேக் என பல கவர்ச்சிகர பரிசு பொருட்களை வழங்கிக் கவர்வதும் நடக்கிறது. பொதுவாக 12 மாதத் திட்டம் என்றால் பதினொரு மாதங்கள் தவணைப்பணம் கட்டினால், 12 வது மாதத்திற்கான தவணையை கடைக்காரர்களே போட்டு தங்க நகையாக தருவார்கள். 6, 18, 24, 30 மாதமாக திட்டங்களும் இருக்கின்றன.
மாதம் தோறும் நகை கடையில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி வரவேண்டும். சீட்டு முடிந்த பிறகு மொத்தத் தொகைக்கு சமமாக தங்க நகை வாங்கிகொள்ளலாம். பணமாக கொடுக்க மாட்டார்கள் நகைச்சீட்டுத் தொகையை விட அதிக தொகைக்கு நகை வேண்டும் என்றால் கூடுதல் பணம் போட்டு வாங்கிக் கொள்ளலாம்.
பலர் மாதம் நகைக்கடைக்குச் சென்று பணம் கட்டுவது ஒரு வேலையாக இருக்கிறதே, என்பதால் நகைச் சீட்டில் சேர்வதை தவிர்த்து வந்தார்கள். அதற்கும் இப்போது நகைக்கடைக்காரர்கள் தீர்வு கண்டுபிடித்து இருக்கிறார்கள். சில மாதத் தவணைகளை சேர்த்து கட்டலாம். மேலும் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நேரடியாக ஈ சி எஸ் ECS எலக்ட்ரானிக் கிலீயரிங் சர்வீஸ் முறையில் பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. சில நகைக் கடைக்காரர்கள் வீட்டுக்கே வந்து நகைச்சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு ரசீது கொடுக்கிறார்கள்.
தங்கச்சீட்டு திட்டம் சாதாரண மக்களால் கூட சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய திட்டமாக இருக்கிறது. மேலும் விண்ணப்ப படிவம் என்பது பெரிதாக எதுவும் இல்லை. ஆவணம் எதுவும் தேவையில்லை என்பதால் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
சாதாரண மக்களை பொருத்தவரையில் குறைவான நடைமுறை மற்றும் சிக்கல் ரிஸ்க் இல்லாத சேமிப்பு முறை என்றால், நகை சேமிப்பு திட்டம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தத் திட்டம் முன்னணி நகைக்கடைகள் மூலம் நிறைவேற்றப்படுவதால் பெரும்பாலும் மோசடி எதிலும் சிக்குவதில்லை. சில கடைகள் மூடப்பட்டு பணம் பறிபோன, சில சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. அந்த வகையில் பாரம்பரியமான நகைக்கடைகளில் நகைச் சீட்டு சேருவது தான் பாதுகாப்பானது.
நகைச்சீட்டில் கடைசி தவணை எந்த தேதியில் முடிகிறதோ, அன்றைக்கு தங்கத்தின் விலை எவ்வளவு உள்ளதோ அந்த விலைக்கு நகை வாங்க முடியும். இந்த விதிமுறையை தான் பெரும்பாலான நகை கடைகள் பின்பற்றி வருகின்றன. நகைச்சேமிப்பு திட்டத்தின் தவணை முறை முடியும் தினத்தில் தங்கத்தின் விலை குறைவாக இருந்தால் மட்டுமே சேமிப்பு திட்டத்தில் லாபமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சில கடைகளில் தவணை முடிந்து சில தினங்கள் கழித்துச் சென்றால் அன்றைக்கு தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால் அன்றைய விலையை போட்டு நகையை கொடுத்து விடுகிறார்கள். அன்றைய தினம் நகையின் விலை குறைந்திருந்தால், தவணை முடிந்த நாளின் விலையை குறிப்பிட்டு அந்த விலைக்குத்தான் நகையை கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். நகை சேமிப்பு திட்டத்தில் தெளிவான சட்டதிட்டங்கள் ஏதுமில்லை. பிரச்சனை வராத வரையில் சுமுகமாக சென்று கொண்டிருக்கும்.
சில கடைக்காரர்கள் சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். குறிப்பிட்ட நகைகளை தான் வாங்க வேண்டும் என்பதும் நடக்கிறது. சில கடைகளில் நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து நகை வாங்குபவர்களுக்கு என்று தனியாக நகைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஏதாவது ஒன்றைத்தான் எடுக்க வேண்டும். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இதர மாடல்களை கேட்டால் தர மாட்டார்கள். இப்படி சொல்பவர்களின் கடைகளில் தங்கம் தரம் குறைவாக இருக்கலாம் அல்லது அவர்கள் காட்டும் நகைகளின் டிசைன் சுமாராக இருக்கக்கூடும். இந்த விவரம் தெரிய வந்தால் இதுபோன்ற கடைகளில் நகைச்சீட்டு சேருவதை தவிர்ப்பது நல்லது.
நகை சேமிப்பு திட்டம் மூலம் வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் நிச்சயம் இருக்கும் இவற்றை கணக்கில் எடுத்துப் பார்த்தால் பெரிய அளவில் லாபம் இருக்க வாய்ப்பு இல்லை எனலாம். காரணம் கடைசி தவணையை கடைக்காரர்கள் கட்டுவது கிட்டத்தட்ட அதற்கு அளிக்கப்படும் வட்டிக்கு இணையாக தான் இருக்கும்.
பல கடைகளில் நகை சேமிப்பு திட்டத் தொகைக்கு சேதாரம் குறைவாக உள்ள தங்க நாணயங்கள் தங்க கட்டிகள் போன்றவற்றை தர மாட்டார்கள். இதுபோன்ற விவரங்களை நகை சேமிப்பு திட்டத்தில் சேரும்போது கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதோடு எழுத்து மூலம் வாங்கி உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
நகை சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்வதற்கு பதில் அந்தத் தொகையை தொடர் வைப்பு (Require Deposit) திட்டத்தில் சேர்த்து அந்தத் தொகையை கொண்டு தங்கம் வாங்கினால் இன்னும் அதிக எடையுள்ள மற்றும் தரமான தங்கத்தை வாங்க முடியும்.
இப்போது பெரும்பாலான வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 6 மாதம் 12 மாதம் 18 மாதம் 24 மாதம் என பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதில் தேவையான காலத்தை தேர்வு செய்து முதிர்வில்தான் வட்டியையும் பெற்று நகை வாங்கிக் கொள்ளலாம். இதில் இடையில் நகைக்கடைக்காரர்கள் ஏமாற்றி விட்டுப் போய்விடுவார்களோ என்கிற பயம் தவிர்க்கப்படும்.
#Tag
#Today Gold Rate #Gold Chit Fund
#Gold Investment